RBI Monetary Policy Committee Meeting: சுமார் ரூ. 7 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் பெற்று வந்தவர்கள் இதுவரை வருமான வரி செலுத்தி வந்த நிலையில், அவர்களுக்கு கடந்த சனிக்கிழமை (பிப். 1) மகிழ்ச்சி அளிக்கும் செய்தி வெளியானது.
ஆம், இனி ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரிச் செலுத்த வேண்டாம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்தது லட்சக்கணக்கான நடுத்தர வர்க்க வரிச் செலுத்தும் இந்திய குடிமகன்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கும்.
பட்ஜெட்டில் வந்த அதிரடி அறிவிப்பு
பட்ஜெட்டுக்கு முன்னர், ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருமானம் பெறுபவர்களுக்கும் வருமான வரிச் சலுகை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், ரூ.7 லட்சத்தில் இருந்து அதிரடியாக ரூ.12 லட்சத்திற்கு மத்திய அரசு உயர்த்தி உள்ளது.
பிரதமர் மோடிதான் இதுகுறித்த யோசனையை அளித்ததாகவும், அதிகாரிகளை சமாதானத்தப்படுத்தவே அதிக நேரம் எடுத்தது எனவும் பட்ஜெட் உரையின் போது நிர்மலா சீதாராமன் பேசியிருந்தார். அந்தளவிற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, தாக்கல் செய்யப்பட்ட 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் என்பது மூலதனச் செலவில் (Capital Expenditure - CAPEX) இருந்து நுகர்வு மற்றும் சேமிப்பு ஆகியவற்றை நோக்கி கவனம் திரும்பியிருக்கிறது என மோதிலால் ஓஸ்வால் நிதி சேவைகள் லிமிடெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நுகர்வு மற்றும் சேமிப்பு
அதாவது முந்தைய ஆண்டுகளில் பட்ஜெட் மூலதனச் செலவுகளில் அதிக கவனம் செலுத்தின. ஆனால், தற்போது குறைவான நுகர்வு மற்றும் மந்தமான பொருளாதாரம் காரணமாக பட்ஜெட் அதன் கவனத்தை நுகர்வு மற்றும் சேமிப்பை நோக்கி திருப்பியிருக்கிறது. இருப்பினும், நிதி பற்றாக்குறை ஒருங்கிணைப்பும் முக்கியமான ஒன்றாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8% பற்றாக்குறை உள்ளது. இது 2025-26 நிதியாண்டில் 4.4% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் குறிப்பிட்டிருந்தார்.
ஆர்பிஐ-யின் நிதி கொள்கைக் குழு கூட்டம்
பட்ஜெட்டின் தாக்கலுக்கு பின்னர் தற்போது அனைத்து முதலீட்டாளர்களின் கவனமும், வர இருக்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் குழு கூட்டத்தின் மீது திரும்பி உள்ளது. இக்கூட்டம் இன்று (பிப். 4) தொடங்கி பிப். 7ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மும்பை ஆர்பிஐ தலைமையகத்தில் இந்த கூட்டம் நடைபெறும். ஆர்பிஐ கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதல் நிதி கொள்கைக் குழு கூட்டம் இதுவாகும். மேலும் வரும் பிப். 7ம் தேதி காலை 10 மணிக்கு ரெப்போ வட்டி விகிதம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரலாம். மேலும் அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளர்களை சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறையும் ரெப்போ வட்டி விகிதம்?
மேலும், இம்முறை நிதி கொள்கைக் குழுவின் ரெப்போ வட்டி விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகளை குறைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இது சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கப்பதற்கான நடவடிக்கையாக இருக்கும் என்றும் மோதிலால் ஓஸ்வால் நிதி சேவைகள் லிமிடெட் (MOFSL) அறிக்கையில் கூறப்படுகிறது.
இதனால் என்ன பயன்?
அதாவது, ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படுவதால் கடனுக்கான வட்டி விகிதமும் குறையும். மக்களின் மாதத் தவணைத் தொகையும் குறையும். இதனால் வருமானம் அதிகரித்து, நுகர்வு மற்றும் சேமிப்பு பெருகும் வாய்ப்பு உள்ளது.
சந்தையின் கவனம் இப்போது மீண்டும் வருமானத்தை நோக்கி திரும்பும் என்றும் ஆர்பிஐ நிதி கொள்கைக் குழுவின் கூட்டத்திலும் இதுசார்ந்த முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்படுகிறது. வருமானம் மெதுவான வேகத்தில் வளரும் என்றும் கூறப்படுகிறது. 2024-25 நிதியாண்டில் வரிக்குப் பிந்தைய நிஃப்டியின் லாபம் 5 சதவீதத்தில் இருந்து, 2025-26 நிதியாண்டில் 16 சதவீதமாக வளரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ