லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை : மத்திய அமைச்சர் மகனின் ஜாமீனை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நடைபெற்ற விவசாயிகள் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

Written by - Chithira Rekha | Last Updated : Apr 18, 2022, 12:28 PM IST
  • லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை
  • ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமீன் ரத்து
  • ஒரு வாரத்திற்குள் சரணடைய உத்தரவு
லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை : மத்திய அமைச்சர் மகனின் ஜாமீனை ரத்து செய்தது உச்சநீதிமன்றம் title=

வேளாண் சட்டங்களை எதிர்த்து உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரியில் கடந்த அக்டோபர் மாதம் 3-ம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மீது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா சென்ற கார் மோதியது. இதில் 4 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் ஒரு பத்திரிகையாளர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். 

இதனைத் தொடர்ந்து ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு அலகாபாத் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 10-ம் தேதி ஜாமீன் வழங்கியது. ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.   இந்த மனுவை தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த மனு மீதான வாதங்கள் கடந்த 4-ம் தேதி முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

மேலும் படிக்க | அக்டோபர் 3 முதல் 9 வரை லக்கிம்பூர் கெரியில் என்ன நடந்தது? முழுக்கதை

இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான விசாரணை மறுக்கப்பட்டுள்ளதென தாங்கள் கருதுவதாகக் குறிப்பிட்ட நீதிபதி சூர்யகாந்த், ஆசிஷ் மிஸ்ரா ஒரு வாரத்திற்குள் சரணடைய உத்தரவிட்டார். முதல் தகவல் அறிக்கையை மட்டும் வழக்கின் மொத்த அறிக்கையாகப் பார்க்கக் கூடாதென குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் நீதித்துறை நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமீன் மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே விசாரித்த நீதிபதி அல்லாமல் வேறொரு நீதிபதி விசாரிக்க உத்தரவிட வேண்டுமென மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அப்படி ஒரு உத்தரவு பிறப்பிப்பது சரியாக இருக்காது எனவும், அதே நீதிபதி இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க விரும்பமாட்டார் என்பதில் உறுதியாக உள்ளதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். 

மேலும் படிக்க | லக்கிம்பூர் கொலை சம்பவம்: உச்சநீதிமன்ற நீதிபதிகள் உ.பி. அரசிடம் சரமாரி கேள்வி

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News