நீதிபதி சந்துரு அறிக்கை... கிழித்தெறிந்த பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் - சென்னை மாமன்றத்தில் பரபரப்பு

Uma Anandan: பள்ளிகளில் சாதிய பாகுபாடு களைவது குறித்து நீதியரசர் சந்துருவின் அறிக்கையை சென்னை பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் மாமன்றத்தில் கிழித்து வீசி தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 24, 2024, 06:54 PM IST
  • உமா ஆனந்தனுக்கு 3 மாத தடை விதிக்க விசிக உறுப்பினர் கோரிக்கை
  • விசிக உறுப்பினர் கோரிக்கைக்கு திமுக உறுப்பினர்கள் ஆதரவு
  • உமா ஆனந்தன் பேசிய கருத்துகள் அவைகுறிப்பில் இருந்து நீக்கம்
நீதிபதி சந்துரு அறிக்கை... கிழித்தெறிந்த பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் - சென்னை மாமன்றத்தில் பரபரப்பு title=

Uma Anandan Condemns Ex Judge Chandru Report: சென்னை மாநகராட்சி கூட்டத்தொடர் இன்று (ஜூன் 24) நடைபெற்றது. கூட்டத்தொடரின் போது பாஜகவின் மாமன்ற உறுப்பினரான உமா ஆனந்தன் வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  பள்ளிகளில் சாதிய பாகுபாடு களைவது குறித்து நீதியரசர் சந்துரு தமிழ்நாடு அரசிடம் சமர்பித்த அறிக்கையின் நகலை சென்னை பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் மாமன்றத்தில் கிழித்து வீசி தனது எதிர்ப்பை தெரிவித்தார். திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பை அடுத்து வெளியேறினார். 

உமா ஆனந்தன் அடுத்த 3 மாதங்களுக்கு அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள தடை விதிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் அம்பேத்வளவன், மேயர் பிரியாவிடம் கோரிக்கை விடுத்தார்.  அவரது கோரிக்கைக்கு திமுக கவுன்சிலர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். மாநகராட்சி ஆணையர் உடன் ஆலோசித்து இதுகுறித்து முடிவு எடுப்பதாக மேயர் பிரியா பதில் அளித்துள்ளார். மாமன்ற நடவடிக்கைக்கு தொடர்பில்லாமல் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் பேசிய கருத்துகள் அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

ஒருதலைப்பட்சமான அறிக்கை

ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு அறிக்கையை கிழித்து எரிந்து மாமன்ற கூட்டத்தில் பாஜக  உறுப்பினர் உமா ஆனந்தன் வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குறிப்பிட்ட சமூக மக்கள் கிறிஸ்துவ சுடுகாட்டில் அனுமதிக்கப்படவில்லை. இதுகுறித்தும் நீதிபதி சந்துரு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்க வேண்டும். நீதிபதி சந்துருவின் அறிக்கை என்பது தலைபட்சமான அறிக்கை, ஒரு தலைபட்சமான நீதிபதியை கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க | சாதிவாரி கணக்கெடுப்பு : முதலமைச்சர் ஸ்டாலின் - பாமக ஜிகே மணி இடையே காரசார விவாதம்..!

ஆகம விதிகள் குறித்து அறிக்கை தயாரிக்க ஒரு நீதிபதியை நியமிக்கிறார்கள், அவர் கடவுள் மறுப்பு கொள்கையை கொண்டவர். அவரை எப்படி அந்த விவகாரத்திற்கு நியமிக்கலாம்...? இதில் முரண்பாடுகள் உள்ளன. வேண்டப்பட்டவர்களை வைத்துக்கொண்டு அறிக்கை தயாரிப்பது என்பது கண் துடைப்பு நாடகம். 

திமுகவினரை நோக்கி ஆவேசம்...

சென்னை மாநகர மாமன்றம் நீதிபதி சந்துரு சமர்பித்த அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும், தெரிவிக்காத காரணத்தால் அந்த அறிக்கையை நான் கிழித்துப் போட்டேன். அப்போது ஒரு திமுக மாமன்ற உறுப்பினர் என்னை வெளியேப் போகச் சொன்னார். அவரின் பெயரை கூட என்னால் சொல்ல முடியும். அவர் என்னை பார்த்து கேட்கிறார், இந்த விவகாரத்தை ஏன் இங்கு, இப்போது பேசுகிறீர்கள் என்று... நான் கேட்கிறேன் அப்போது எதற்கு இங்கு உதயநிதி ஸ்டாலின் துதி பாடி பேசுகிறீர்கள். முதலமைச்சர் என்றால் கூட பரவாயில்லை, உதயநிதியை துதி பாடுவதற்கு காரணம் என்ன" என கேள்வி எழுப்பி, தனது கண்டனத்தையும் தெரிவித்தார். 

நீதிபதி சந்துருவின் அறிக்கை

தமிழகத்தில் உள்ள அரசு  பள்ளிகளில் சாதி ரீதியான வன்முறைகளை தவிர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பள்ளி மாணவரை, சக மாணவர்கள் சாதி ரீதியாக கொடூரமாக தாக்கியதை தொடர்ந்து இந்த குழு அமைக்கப்பட்டது. அந்த குழு சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அதன் அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கைக்கு தமிழக பாஜகவினர் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  

ஓய்பு பெற்ற நீதிபதி சந்துரு தயாரித்த அறிக்கையில், பள்ளிகளில் சாதி ரீதியான வன்முறைகளை தவிர்க்க மாணவர்களின் கைகளில் வண்ணக்கயிறுகள், நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என பரிந்துரைத்திருந்தார். மேலும், மாணவர்களின் வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் சாதி பெயர் இடம்பெறக் கூடாது எனவும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். மாணவர்களின் சாதி விவரங்களை ரகசியமாக வைக்க வேண்டும் என்றும் சாதி ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் ஆதிக்கச் சாதியை சேர்ந்தவரை தலைமை ஆசிரியராக நியமிக்கக் கூடாது என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். அந்த அறிக்கையில் இன்னும் பல பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. 
 
மேலும் படிக்க | கள்ளச்சாராய வியாபாரிகளை என்கவுண்டர் செய்யுங்கள் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஆவேசம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News