8th Pay Commission: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஜனவரி மாதம் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தையும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கான கொடுப்பனவுகளையும் மறுஆய்வு செய்வதற்காக 8வது ஊதியக் குழுவை அமைக்க ஒப்புதல் அளித்தது.
8th Pay Commission: மத்திய அரசின் ஒப்புதலைத் தொடர்ந்து தேசிய கூட்டு ஆலோசனை இயந்திரக் குழு (JCM) ஊழியர்கள் தரப்பு, 8வது மத்திய ஊதியக் குழுவிற்கான (CPC) விதிமுறைகளுக்கான (ToR) பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது. இது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஊதியக் கட்டமைப்பு, கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஆதரிக்கும் வகையில் உள்ளது. சம்பளக் கட்டமைப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கும் தொழில் முன்னேற்றத்தில் உள்ள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் சில ஊதிய அளவுகளை, அதாவது பே ஸ்கேல்களை இணைப்பதற்கான முன்மொழிவு இதன் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். பல்வேறு பே ஸ்கேல்கள் இணைக்கப்படுமா? இதனால் என்ன மாற்றம் ஏற்படும்.
பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) சமீபத்தில் 8வது மத்திய ஊதியக் குழுவிற்கான விதிமுறைகளை (ToR) இறுதி செய்ய தேசிய கவுன்சில் JCM இன் பணியாளர் தரப்பிலிருந்து உள்ளீடுகளைக் கோரியது. NC-JCM ஊழியர்கள் தரப்பின் செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா, கவனம் செலுத்த வேண்டிய முக்கிய பகுதிகளை எடுத்துக்காட்டும் ஒரு விரிவான திட்டத்தை முன்வைத்துள்ளார்.
ஊழியர்கள் தரப்பு முன்வைத்த ஒரு முக்கிய பரிந்துரை, அரசு ஊழியர்களுக்கான 1-6 நிலைகளுக்குள் உள்ள ஊதிய விகிதங்களை ஒருங்கிணைப்பதாகும். தற்போதைய பே ஸ்கேல் அமைப்பு, லெவல் 1 முதல் லெவல் 18 வரையிலான 18 நிலைகளைக் கொண்டுள்ளது. 7வது ஊதியக் குழுவின் பரிந்திரைகளின் படி, லெவல் 1 இல் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18,000 ஆகவும், லெவல் 18 இல் அதிகபட்ச ஊதியம் மாதத்திற்கு ரூ.2,50,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
ஊழியர்கள் தரப்பு 8வது ஊதியக்குழுவிற்கான சில முன்மொழிவுகளை வைத்துள்ளது. அவற்றில் ஒரு முக்கியமான முன்மொழிவு, சமமான ஊதியம் மற்றும் மேம்பட்ட தொழில் முன்னேற்றத்திற்காக குறைந்த ஊதிய விகிதங்களை ஒருங்கிணைப்பதாகும். இந்த பரிந்துரையில் பின்வரும் நிலைகள் இணைக்கப்பட்டுள்ளன: லெவல் 1 மற்றும் லெவல் 2, லெவல் 3 மற்றும் லெவல் 4, லெவல் 5 மற்றும் லெவல் 6.
ஊதிய அதிகரிப்பில் உள்ள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதும் தெளிவான சம்பள அமைப்பை உருவாக்குவதும் இந்த இணைப்பின் முக்கிய நோக்கமாகும். இந்த ஒருங்கிணைப்பு, தேக்கநிலையைக் குறைத்து மேம்பட்ட நிதி வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலமும் ஊழியர்களின் முன்னேற்றத்தை இது மேம்படுத்தும் என்பதைக் குறிக்கிறது.
தற்போது லெவல் 1 ஊழியர்கள் மாதத்திற்கு ரூ.18,000 அடிப்படை ஊதியமாகப் பெறுகிறார்கள். லெவல் 2 ஊழியர்கள் ரூ.19,900 பெறுகிறார்கள். இந்த நிலைகள் அதாவது லெவல்கள் ஒன்றாக இணைக்கப்பட்டால், திருத்தப்பட்ட ஊதிய அமைப்பு ஒன்றிலிருந்து தொடங்கும் என்பதால், லெவல் 1 ஊழியர்களுக்கு இது அதிக நன்மை பயக்கும். 8வது ஊதியக் குழுவில் ஊதிய உயர்வைக் கணக்கிட்ட பிறகு, ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்பட்டால். திருத்தப்பட்ட அடிப்படை ஊதியம் ரூ.51,480 ஆக அதிகரிக்கும்.
இதேபோல், நிலை 3 மற்றும் நிலை 4 இணைக்கப்பட்டால், இணைக்கப்பட்ட ஊதியக் காரணியின் கீழ் உள்ள ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட சம்பளம் ரூ.72,930 ஆக இருக்கும். மேலும், லெவல் 5 மற்றும் லெவல் 6 இல் உள்ள ஊழியர்களுக்கு, 2.86 ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில் சம்பளம் ரூ.1,01,244 வரை எட்டக்கூடும்.
பே ஸ்கேல் இணைப்புக்கு கூடுதலாக, ஊழியர்கள் தரப்பு அடிப்படை ஊதியம் மற்றும் ஓய்வூதியத்துடன் அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றை உடனடியாக ஒருங்கிணைப்பதை பற்றியும் வலியுறுத்தியுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மீதான பணவீக்கத்தின் விளைவுகளைத் தணிக்கவும், கையில் கிடைக்கும் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை அதிகரிக்கவும், ஊதிய அமைப்பில் அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் அகவிலை நிவாரணத்தின் (Dearness Relief) ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை இணைக்க இந்த திட்டம் பரிந்துரைக்கிறது.
8வது மத்திய ஊதிய ஆணையத்திற்கான (CPC) பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்ய ஒரு நிலைக்குழு கூட்டத்தை கூட்டுமாறு ஊழியர்கள் தரப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது அங்கீகரிக்கப்பட்டால், இந்த முன்மொழியப்பட்ட மாற்றங்கள் பல்வேறு துறைகளில் உள்ள ஏராளமான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு குறிப்பிடத்தக்க நிதி நிவாரணத்தை வழங்கவும், கட்டமைப்பு சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தவும் பெரிய அளவில் உதவும்.
இந்த மாதத்திற்குள் 8வது ஊதியக்குழுவிற்கு ஒரு தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவை அரசாங்கம் அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊதியக் குழு அதன் பரிந்துரைகளை 12 மாத காலக்கெடுவிற்குள் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க உள்ளது.
ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்பட்டால் தோராயமாக எவ்வளவு ஊதிய உயர்வு இருக்கும்? அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆக இருப்பவர்களது ஊதியம் ரூ.51,480 ஆக அதிகரிக்கும். ரூ.25,000 அடிப்படை ஊதியம் ரூ.71,500 ஆகவும், ரூ.35,000 ரூ.1,00,100 ஆகவும் ரூ.50,000 ரூ.1,42,800 ஆகவும் அதிகரிக்கும்.
8வது ஊதியக்குழ்வில் ஓய்வூதியதாரர்களுக்கும் பெரிய அளவிலான நன்மைகள் கிடைக்கும். இவர்களது ஓய்வூதியத்தில் நல்ல அதிகரிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்பட்டால், மாத ஓய்வூதியத்தில் சுமார் 30% அதிகரிப்பு இருக்கலாம். குறைந்தபட்ச ஓய்வூதியம் தற்போதுள்ள ரூ.9,000 லிருந்து ரூ.25,740 ஆக உயரும்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் 8வது ஊதியக்குழுவின் மூலம் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.