Kalaignar Kaivinai Thittam | கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் யாரெல்லாம் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினைத் திட்டத்தின் (Kalaignar Kaivinai Thittam) கீழ் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாடு அரசு கலைஞர் கைவினைத் திட்டம் (Kalaignar Kaivinai Thittam) தொடங்கியுள்ளது. அதாவது, கலை மற்றும் கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர்க்கு மேம்பட்ட பயிற்சி அளிக்கவும் மானியத்துடன் கூடிய பிணையமில்லாக் கடன் வழங்கவும், அவர்களின் சந்தைப்படுத்தும் திறனை உயர்த்தவும் ஆண்டுதோறும் 10,000 பேர் பயன் பெறும் வகையில் 20 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கலைஞர் கைவினை திட்டம் 2024-25 தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தையற்கலைஞர், மண்பாண்டம் வனைவோர், சிற்பக் கைவினைஞர், தச்சு வேலை செய்வோர், பூ தொடுப்போர், பூ அலங்காரம் செய்வோர், சிகை அலங்காரம் செய்வோர், அழகுக் கலை நிபுணர், பாய் பின்னுவோர், கூடை முடைவோர், மூங்கிலாலான பொருட்கள் செய்வோர், நெசவு செய்வோர், துணி வெளுப்போர், சாயமிடுவோர், வண்ணம் தீட்டுவோர் பயன்பெறலாம்.
மேலும், கட்டடம் கட்டும் வேலை செய்வோர், தோல் பொருட்கள் செய்வோர், உலோகப் பொருட்கள் செய்வோர், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்வோர், மீன் வலை செய்வோர் உள்ளிட்ட பல்வகைக் கலை மற்றும் கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர்க்கு தொழில்திறம் சார் மேம்பட்ட பயிற்சியுடன் அவர்கள் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் கொண்டு தொழில்புரிய ரூ.3 இலட்சம் வரை பிணையமில்லாமல் கடனுதவி வங்கிகள் மூலம் வழங்கப்படும்.
கடன் தொகையில் 25% அதிகபட்சம் ரூ.50,000 மானியமாக வழங்கப்படும். கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தில் 5% வரை வட்டி மானியமும் வழங்கப்படும். அனைத்து அரசு மற்றும் தனியார் வணிக வங்கிகள், தாய்கோ வங்கி, கூட்டுறவு வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்கத் தகுதி பெற்றவை. கைவினைஞர்களின் சந்தைப்படுத்தும் திறனை உயர்த்துவதற்கான ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் 35 வயதுக்கு மேற்பட்டவராகவும் எந்த வகைத் தொழிலுக்காக கடனுதவி பெற விரும்புகிறாரோ அந்தத் தொழிலில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் முன்னனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். இவ்விரண்டு அடிப்படைத் தகுதிகளும் கொண்டோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.
விண்ணப்பிக்க தனி நபரின் போட்டோ, ஆதார் அட்டை, தொழில் அனுபவத்தை உறுதி செய்ய தொழிலாளர் நலவாரியம் வழங்கிய அடையாள அட்டை அல்லது சுய சான்றிதழ், திட்ட அறிக்கை இவை மட்டுமே போதுமானவை. சுய சான்றிதழ் மாதிரிப் படிவம் மற்றும் மாதிரி திட்ட அறிக்கை மேற்சொன்ன இணையதளத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்வமும், தேவையும் உள்ள கைவினைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், இத்திட்டத்தின் கீழ் தச்சர், கட்டடம் கட்டும் வேலை செய்தல், நகைகள் செய்தல், சிகை அலங்காரம் செய்தல், தையற் தொழில், மரசிற்பம் செய்தல், பூ அலங்காரம் செய்தல், கூடை முடைதல், பாசி மணி வேலைப்பாடுகள் செய்தல், மண்பாண்டம் வனைதல் போன்ற தொழில்களுக்கு விண்ணப்பித்த 64 பயனாளிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் ஒப்பளிப்பு பெறப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்த மேலான தகவல்களைப் பெறவும் விண்ணப்பம் பதிவு செய்வது தொடர்பான ஆலோசனைகள், வழிகாட்டுதல் பெறவும் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், எண்.95/242, ராஜா நகர், கள்ளக்குறிச்சி அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 04151-294057ஆகிய எண் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் தெரிவித்துள்ளார்.