கூகுளில் ரூ.1.44 கோடிக்கு வேலை: உண்மை என்ன?

Last Updated : Aug 3, 2017, 03:40 PM IST
கூகுளில் ரூ.1.44 கோடிக்கு வேலை: உண்மை என்ன? title=

உலகின் மிகப்பெரிய சர்ச் என்ஜின் நிறுவனமாக விளங்கும் கூகிள்லில் வேலை செய்ய வேண்டும் என்பது, இந்தியாவில் இருக்கும் அனைத்துப் பட்டதாரிகளின் கனவாக இருக்கும். 

சண்டிகர் அரசுப் பள்ளியில் பயிலும் ஹர்ஷித்துக்கு கூகுளில் கிராஃபிக் டிசைனர் பணி கிடைத்திருப்பதாகவும், முதல் ஒரு வருடத்துக்கு அந்நிறுவனம் இந்த மாணவருக்கு பயிற்சி அளிக்கிறது. இந்தப் பயிற்சிக் காலத்தில் மட்டும் மாதம் ரூ.4 லட்சம் ஊக்கத்தொகை அளிக்கும். இதையடுத்து, பணியில் சேர்ந்த பின்பு மாதம் ரூ.12 லட்சம் வீதம் ஒரு வருடத்துக்கு ரூ.1.44 கோடி ஊதியம் அளிக்கும். இதற்கான பணி ஆணையை கூகுள் நிறுவனம் ஹர்ஷித்துக்கு செவ்வாய்கிழமை வழங்கியது என்று ஊடகங்களில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஹர்ஷித் ஷர்மா என்ற மாணவன், கூகுளில் ரூ.1.44 கோடி ஊதியத்துடன் கிராஃபிக் டிசைனராக பணியில் சேர்ந்திருப்பதாக வந்த செய்தியில் உண்மையில்லை என்று தெரிய வந்துள்ளது.

இது விளையாட்டுக்காக மாணவன் செய்த குறும்புதான் என்றும், அது தெரியாமல் பள்ளி ஆசிரியர், பள்ளி நிர்வாகத்துக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் அளித்ததால் இந்த செய்தி ஊடகங்களில் பரவியது தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, செல்போன் அப்ளிகேஷன்களை எவ்வாறு பயன்படுத்துவது, பணமின்றி டெபிட், கிரெடிட் கார்டுகளைக் கொண்டு எவ்வாறு கட்டணம் செலுத்துவது போன்ற பல விஷயங்களை பள்ளி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களும் ஹர்ஷித் ஷர்மா கூறியுள்ளான். இதுவே அவன் சொன்ன பொய்யை நம்பக் காரணமாக அமைந்துவிட்டது.

இது குறித்து பள்ளி ஆசிரியர் கூறுகையில், 15 நாட்களுக்கு முன்பு, ஒரு பெட்டி நிறைய இனிப்புகளைக் கொண்டு வந்த ஹர்ஷித், தனக்கு கூகுளில் வேலை கிடைத்திருப்பதாகவும், விரைவில் தான் அமெரிக்கா செல்லவிருப்பதாகவும் கூறினான். கணினியில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்ததால் அவன் சொன்னதை நாங்களும் நம்பினோம் என்றார்.

பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில், பள்ளி ஆசிரியர் இது பற்றி கூறியதும், உரிய ஆதாரங்களை மாணவனிடம் கேட்டோம். அவனும் கூகுள் அளித்தது போன்ற ஒரு சான்றிதழை அளித்தான். அது பற்றி விரிவான அறிக்கை தயார் செய்து மாவட்ட நிர்வாகத்துக்கு அளித்தோம். ஆனால், அந்த சான்றிதழ் பொய்யானது என்பது தெரிய வந்துள்ளது. இது பற்றி கேட்க மாணவனை தொடர்பு கொண்ட போது அவனது செல்ஃபோன் சுவிட் ஆஃப் செய்யப்பட்டுள்ளது என்றார்.

Trending News