பிரதமர் மோடியின் அசாம் பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்...

"நேரமின்மை" காரணமாக அசாம் மாநில தலைநகரில் நடைபெறவிருக்கும் "Khelo India" விளையாட்டுகளை தொடங்கிவைக்க பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 10 அன்று குவாஹாட்டிக்கு செல்ல மாட்டார் என பாஜக மூத்த தலைவர் புதன்கிழமை தெரிவித்தார்.

Last Updated : Jan 8, 2020, 08:17 PM IST
பிரதமர் மோடியின் அசாம் பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்... title=

"நேரமின்மை" காரணமாக அசாம் மாநில தலைநகரில் நடைபெறவிருக்கும் "Khelo India" விளையாட்டுகளை தொடங்கிவைக்க பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 10 அன்று குவாஹாட்டிக்கு செல்ல மாட்டார் என பாஜக மூத்த தலைவர் புதன்கிழமை தெரிவித்தார்.

"இது (வருகை) ரத்து செய்யப்பட்டுள்ளது" என்று அசாம் பாஜக செய்தித் தொடர்பாளர் திவான் துருபா ஜோதி மரால் IANS-இடம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாநில அரசு பிரதமரை அணுகியதாகவும், ஆனால் மோடிக்கு நேரம் கிடைக்காததால் இந்த விஜயம் நடக்கவில்லை என்றும் மரால் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பிரதமரின் எந்தவொரு திட்டத்தையும் மாநில அரசு இதுவரை பெறவில்லை என்றும் மாநில நிதியமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா முன்னதாக தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அவர் முன்னதாக தெரிவிக்கையில்., "நாங்கள் பிரதமரின் எந்த திட்டத்தையும் பெறவில்லை. எனவே முதலில் உறுதிப்படுத்தாமல் எப்படி ரத்து செய்ய முடியும்?" என்று சர்மா IANS-இடம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில் தாம் பிரதமர் விளையாட்டுக்களுக்காக குவாஹாட்டிக்கு வரவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது.

புதிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் அனைத்து அசாம் மாணவர் சங்கமும் (AASU), விளையாட்டுக்காக மோடி இங்கு வந்தால் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் என்று எச்சரித்துள்ளனர். இந்நிலையில் தற்போது பிரதமர் மோடி குவாஹாட்டிக்கு வரவில்லை எனவும் செய்திகள் பரவி வருகின்றன.

2014 டிசம்பர் 31-ஆம் தேதி வரை மதத் துன்புறுத்தல்களை எதிர்கொண்டு பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு புலம் பெயர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம், தற்போது நாடெங்கிலும் போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது. காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர், எனினும் தங்களது நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கும் முடிவு இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் காங்கிரஸ் தலைமையிலான பொய் போராட்டக்காரர்கள் மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தி வருகின்றனர் எனவும் குற்றம்சாட்டி வருகிறது. 

கேரளாவைத் தவிர, மேற்கு வங்கம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் முதலமைச்சர்களும், இந்த சட்டமானது "அரசியலமைப்பிற்கு விரோதமானது" என கூறி இதற்கு தங்கள் மாநிலத்தில் அனுமதி இல்லை என தெரிவித்து வருகின்றனர்.. 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "உங்கள் (பாஜக) அறிக்கையில், வளர்ச்சி பிரச்சினைகளுக்கு பதிலாக, நாட்டை பிளவுபடுத்துவதாக வாக்குறுதியை அளித்துள்ளீர்கள். குடியுரிமை ஏன் மதத்தின் அடிப்படையில் இருக்கும்? இதை நான் ஏற்க மாட்டேன், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நீங்கள் பெரும்பான்மை கொண்டிருப்பதால் பலவந்தமாக சட்டங்களை இயற்றலாம். ஆனால் நாட்டை பிளவுபடுத்த நாங்கள் உங்களை அனுமதிக்க மாட்டோம்." என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், குடியுரிமை தொடர்பாக எந்தவொரு சட்டத்தையும் நிறைவேற்ற எந்த மாநில சட்டமன்றத்திற்கும் அதிகாரம் இல்லை என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். மேலும் குடியுரிமை தொடர்பாக எந்தவொரு சட்டத்தையும் நிறைவேற்றும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு மட்டுமே உள்ளது, கேரளா உட்பட எந்த சட்டமன்றத்திற்கும் அதிகாரம் இல்லை என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News